நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றம்!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் “நாடாளுமன்ற ஓய்வூதியம் சட்டமூலம்”இன்று அமோக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக வெறும் 2 வாக்குகளும் பதிவாகின. 152 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேறியது.
உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, எவ்வித திருத்தங்களுமின்றி சட்டமூலம் அப்படியே நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று தனது கையொப்பத்தை இட்டு சான்றுரைப்படுத்தியதை அடுத்து, இது 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
1977ஆம் ஆண்டின் ஓய்வூதியச் சட்டம் இதன் மூலம் நீக்கப்படுகிறது. இதன்படி, தற்போது ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் இனிமேல் அத்தகைய கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது, அவை உடனடியாக நிறுத்தப்படும்.
கடந்த ஜனவரி 07ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் முதலாவது மதிப்பீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலம், இன்று 6 மணிநேர விவாதத்திற்குப் பிறகு சட்டமாக மாறியுள்ளது.