ஜப்பானிலிருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான பேனா குறித்த செய்தி இப்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. ஜப்பானின் கொச்சி (Kochi) மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோரின் கற்பனையில் உருவான இந்த ‘ஆணிசாக்டிஸ்’ (Anisakis) பேனா, பார்ப்பதற்குச் சாதாரணப் பேனா போலத் தெரிந்தாலும், அதன் வெளிப்படையான ஒரு பகுதியில் உயிருள்ள ஒட்டுண்ணிப் புழு (Parasitic worm) ஒன்று மூலிகை எண்ணெய்க்குள் நீந்திக் கொண்டிருப்பதுதான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மீன்களில் இயற்கையாகக் காணப்படும் ‘ஆணிசாக்டிஸ்’ எனும் நெமடோட் வகை ஒட்டுண்ணிப் புழுக்கள் இந்தப் பேனாவின் உள்ளே வைக்கப்படுகின்றன.
பேனாவின் மேல்பகுதியில் உள்ள சிறிய கண்ணாடிக்குள்ளே இருக்கும் இந்தப் புழு, சுமார் 4 முதல் 5 நாட்கள் வரை உயிருடன் துடித்துக் கொண்டிருக்கும். அதன் பிறகு அது இறந்துவிடும்.
இது ஒரு வேடிக்கையான அல்லது அதிர்ச்சியூட்டும் பரிசுப் பொருளாக (Souvenir) ஜப்பானில் சுமார் 950 யென் (இந்திய மதிப்பில் சுமார் 500 ரூபாய்) விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எச்சரிக்கை: ஆணிசாக்டிஸ் என்பது மனிதர்களின் குடலைப் பாதிக்கும் ஒரு வகை ஒட்டுண்ணி. சமைக்காத அல்லது சரியாகச் சுத்தம் செய்யப்படாத கடல் மீன்களை உண்பதன் மூலம் இது மனித உடலில் புகுந்து கடும் வயிற்று வலி மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும்.
கையெழுத்துப் போடும்போது ஒரு புழு துடித்துக் கொண்டிருப்பது பலருக்கு ‘அருவருப்பாக’ இருந்தாலும், ஜப்பானின் இந்த விசித்திரமான ‘கைவினைப் பொருள்’ இப்போது இணையவாசிகள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.